×

ஜோதிட ரகசியங்கள்

அப்பா உறவு சரியில்லையா?

சூரியன் பிதுர்காரகன். அவர் தந்தை வழி உறவில் சாதக பாதகங்கள் அமைய காரணமாவார். சூரிய தோஷம் இருந்தால் தகப்பனாருக்கும் பிள்ளைக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அல்லது இருவரும் பிரிந்து இருப்பார்கள். ஒருவரை ஒருவர் பகை பாராட்டிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலருக்கு இது கடுமையான தோஷமாக மாறி அப்பா பிள்ளை உறவையே சிதைத்து விடும். அவர்கள் ஒரு முறை கும்பகோணத்திற்குப் பக்கத்தில் இருக்கக் கூடிய சூரியனார் கோயிலுக்குச் சென்று வருவது நல்லது. ஞாயிற்றுக் கிழமைகளில் விரதம் இருந்து காலை மாலை சூரிய காயத்ரி சொல்லி வணங்குங்கள். கோதுமை பொங்கல் செய்தும் படைக்கலாம்.

எந்த ராசிக்கு எந்த வீடு?

பொதுவாகவே 12 ராசிகளில் ஒவ்வொரு ராசிக்கும் எந்த திசையைப் பார்க்கும் படியாக வாசல் அமைந்த வீடு அதிர்ஷ்டகரமாக இருக்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது பெரும்பாலோருக்கு பொருத்தமாகவும் வருகின்றது. உதாரணமாக மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு கிழக்கு வாசல் பார்த்த வீடும், ரிஷபம், கன்னி, மகரம் ராசிக்காரர்களுக்கு தெற்கு வாசல் பார்த்த வீடும், மிதுனம், துலாம், கும்ப ராசிக்காரர்களுக்கு மேற்கு வாசல் பார்த்த வீடும், கடகம், விருச்சிகம், மீன ராசிக்காரர்களுக்கு வடக்கு வாசல் பார்த்த வீடும் ராசியான வாசல் உள்ள வீடுகளாக இருக்கும். இது பொது விதி. வேறு சொந்த ஜாதக கிரக பலத்தால் திசை மாறலாம்.

மாணவர்கள் தேர்வுக்குச் செல்கிறீர்களா, ஒரு நிமிஷம்

ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும்; நன்றாகத் தேர்வு எழுத வேண்டும்; நிறைய மதிப்பெண்களை பெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். பல குழந்தைகளுக்கு படிப்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில் தடுமாற்றமும் பதற்றமும் இருக்கும். அவர்கள் தினசரி லட்சுமி ஹயக்ரீவர் பெருமாளை ஐந்து நிமிடம் தியானம் செய்து, ‘‘ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்’’ என்ற மந்திரத்தை உச்சரிப்பதன் மூலம் நினைவுத்திறன் வளரும். பதற்றம் குறையும். தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.

ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் ‘வித்யாகாரகன்’ என அழைக்கப்படுகிறார். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4,9-ஆம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும், ஞாபக சக்தி அதிகரிக்கும்.

தினம் காலையில் பூஜை அறையில் இதைச் செய்யுங்கள்

நாம் ஒவ்வொருவரும் தினமும் காலையில் பூஜைகளைச் செய்கின்றோம். சில முக்கியமான கோயில்களில் காலை வேளையில் சுவாமிக்கு முன்னால் பஞ்சாங்கம் படிப்பார்கள். ஒரு காலத்தில் இதை வீட்டிலும் சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள். இப்பொழுதும் ஒரு சிலர் படிக்கிறார்கள். பஞ்சாங்கம் படிப்பதன் மூலமாக மிகச் சிறந்த பலன்கள் கிடைக்கும். பஞ்சாங்கம் என்பது வேறு ஒன்றும் இல்லை. அன்றைய நாள், (உதாரணமாக திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை), நட்சத்திரம் (அன்றைய நட்சத்திரம் சுவாதியோ கேட்டையோ மூலமோ என்ன நட்சத்திரமோ அதைச் சொல்ல வேண்டும்) என்ன யோகம், என்ன கரணம், என்ன திதி (அஷ்டமியா, நவமியா) என்கிற ஐந்து விஷயங்களை சுவாமிக்கு முன்னால் பஞ்சாங்கத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு பூஜையை துவக்குவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

இதில் கிழமையைச் சொல்வதால் ஆயுள் வளரும். அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் வளரும். அன்றைய நட்சத்திரத்தைச் சொல்வதால் பாவங்கள் நீங்கும். அன்றைய யோகத்தைக் கூறுவதால் நோய்கள் அண்டாது, ஆரோக்கியம் வளரும். அன்றைய கரணத்தைக் கூறுவதால் நம்முடைய காரியங்கள் வெற்றி பெறும். ஒரு நிமிடம் பஞ்சாங்கம் படிப்பதால் இத்தனை நன்மை என்பதை மறந்துவிடாதீர்கள்.

பூமி யோகம் கிடைக்க வராகர்

என்னதான் முயன்றாலும் குடியிருப்பதற்கு ஒரு சின்ன இடம்கூட வாங்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். அல்லது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வாங்க முயற்சி செய்தாலும் கடன் உதவி கிடைக்காமல், அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ தள்ளிப் போகும். இதற்கு ஒரு அருமையான பரிகாரம் உண்டு.
சிதம்பரம் பக்கத்திலே ஸ்ரீமுஷ்ணம் என்றொரு தலம் உண்டு. அங்கே பூமியை மீட்டுக் கொடுத்த வராகப் பெருமாள், இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்ற படி அற்புதமாகக் காட்சி தந்து கொண்டிருப்பார்.

ஒரே ஒரு முறை அங்கே சென்று மனம் உருகி பிரார்த்தனையைச் செய்யுங்கள். இயன்றால் ஒரு மலர் மாலையை வாங்கி பகவானுக்குச் சமர்ப்பியுங்கள். பெயர், நட்சத்திரம் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து வாருங்கள் எத்தனைத் தடைகள் இருந்தாலும் அது நீங்கி உடனடியாக உங்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு மனையோ வீடோ உங்களுக்குக் கிடைத்துவிடும்.

வீட்டுப் பிரச்னையா? வீடு பத்திரம் சட்டச் சிக்கலா?

ஒரு சிலருக்கு வீட்டில் எப்பொழுதும் ஒரு பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். மனைகட்டு, சொத்துத் தகராறுகள், இருக்கும். அது கோர்ட், கேஸ் என்று இழுக்கும். ஏதோ ஒரு காரணத்தினால் வீடு அல்லது மனைக்கட்டு அடமானம் வைத்து பணம் வாங்கி இருப்போம். ஆனால் அடமானம் வைத்த வீட்டை அல்லது மனைக்கட்டை மீட்கவே முடியாத நிலை ஏற்படும். செவ்வாய் பலம் இழந்து இருப்பதும், ராகு போன்ற சர்ப்ப கிரகங்களுடன் இணைந்து இருப்பதும், சந்திரன் இவர்களோடு சேர்ந்து இருப்பதும் இதற்குக் காரணம்.

இதற்கு இரண்டு பரிகாரங்கள் இருக்கின்றன. 1. அருகாமையில் உள்ள முருகன் கோயிலில் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்ட நாள்களில் சென்று சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, ஏழு முறை பிராகாரத்தை வலம் வாருங்கள். 2. செவ்வாய்க்கிழமை பிரதோஷ காலத்தில் அதாவது சாயங்காலம் ஐந்தரை மணி முதல் ஆறரை மணிக்குள் கற்கண்டு போட்டுக் காய்ச்சிய பாலையோ, வெல்லம், ஏலக்காய், எலுமிச்சம் பழம் கலந்த பானகத்தையோ வைத்து லட்சுமி நாராயணருக்குப் படையுங்கள். தொடர்ந்து ஏழு வாரம் செய்து வந்தால் வீடு, மனை கட்டு சம்பந்தப்பட்ட சட்டப் பிரச்னைகள் தீர்ந்துவிடும். உங்கள் சொத்து உங்கள் கைக்கு வந்து சேர்ந்து விடும்.

தொகுப்பு: பராசரன்

The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Tags : Surya ,Surya Dosham… ,
× RELATED தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர்...